
விருதுநகர்
சென்னையில் அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தின் பல இடங்களில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்ஸின் உருவபொம்மைகளை எரித்து டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
சென்னையில் நேற்று நடந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் நேற்று மாலை டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் திரண்டு வந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்தனர்.
மேலும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் கே.கே.சிவசாமி, ஒன்றியச் செயலாளர்கள் காரியாபட்டி முருகன், திருச்சுழி குருசாமி, நரிக்குடி பூமிநாதன், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் மச்சேஸ்வரன், எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் வாழை முத்துசாமி, பொதுக்குழு உறுப்பினர் பழனி, காரியாபட்டி நகர பாசறைச் செயலாளர் சந்துரு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி, கூட்டுறவு வங்கித் தலைவர் சீமைராஜ் மற்றும் நாலூர் ராஜேந்திரன் உள்பட ஏராளாமனோர் பங்கேற்றனர்.
இதேபோல, ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே நகராட்சி முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன், வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் இபிஎஸ்-ஸின் உருவ பொம்மையை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோன்று, சேத்தூரில் மேற்கு ஒன்றியச் செயலாளர் முருகையாபாண்டியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் இபிஎஸ், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.