டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மரவியாபாரி ஒருவர் நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், டெங்குவின் தாக்கம் அதிகரித்தே வருகிறது.
தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்தக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசை தொடரந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்தவர் மரவியாபாரி ராஜாமணி. இவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைதொடர்ந்து இன்று ராஜாமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது என அதிகாரிகளும் அமைச்சர்களும் கூறினாலும் அவ்வபோது அங்காங்கே டெங்கு மரணங்கள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளன.