
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் என அண்ணா தொழிற்சங்கத்தின் சின்னசாமி தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய5 பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.
இதையடுத்து போராட்டம் வலுவடைந்ததையடுத்து தற்காலிக ஓட்டுனர்களை வைத்து தமிழக அரசு பேருந்துகளை இயக்கியது. இதனால் நிறைய விபத்துகள் ஏற்பட்டதால் ஊழியர்கள் தானாக முன் வந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கருடன் அண்ணா தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அண்ணா தொழிற்சங்கத்தின் சின்னசாமி கூறுகையில், போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.
நிலுவை தொகை குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு செபடம்பர் இறுதிக்குள் நிலுவை தொகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.