பேருந்து கட்டண உயர்வா? இல்லவே இல்லை..! திடீர் பல்டி அடித்த அமைச்சர் சிவசங்கர்

By Ajmal KhanFirst Published May 16, 2022, 4:29 PM IST
Highlights

மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகளின் கட்டணத்தை ஒப்பிட்டு விலை உயர்வுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அந்த செய்தி தவறானது என அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மற்ற மாநில பேருந்து கட்டணத்தை ஒப்பிட்டு பட்டியல் தயார்

தமிழகத்தில் நிதிபற்றாக்குறை காரணமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கடனாக  6.53 லட்சம் கோடி உள்ளது இந்தநிலையில்  திமுக அரசு பதவியேற்ற ஒரு வருட காலத்தில் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திர பதிவு முத்திரை கட்டணம், டாஸ்மாக் கட்டணம் போன்றவற்றை தமிழக அரசு  உயர்த்தி உள்ளது. இந்தநிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் கட்டணம் மற்றும் பராமரிப்பு பணி போன்றவற்றால் போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பேருந்து கட்டணம் உயர இருப்பதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தகவல் ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், ஆந்திரா, கேரளா அரசு பேருந்துகளில் உள்ள தொலைதூர பயணப் பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து அதற்கேற்ப தமிழக போக்குவரத்துதுறை அதிகாரிகள் கட்டண உயர்வு பட்டியலை தயார் செய்துள்ளதாக தெரிவித்தார். ஆனால், கட்டண உயர்வு குறித்து தமிழக  முதலமைச்சர் இதுவரை எந்த வித உத்தரவிடவில்லை எனவும்  அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார். 

பேருந்து கட்டணம் உயர்வு - தவறான செய்தி

இந்தநிலையில் இந்த தகவலை மறுத்து தற்போது அமைச்சர் சிவசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக இன்று செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து இன்று என்னிடம் கேள்வி கேட்ட போது, அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை என்று தெரிவித்து விட்டேன். இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் இடும் போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகள் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அப்படி தான் பர்மிட் வழங்கப்படும். கேரள மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில். அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அட்டவணையை குழப்பிக் கொண்டு. தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது" என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது என தெரிவித்து இருந்தார். 

ஒரே ஆண்டில் 112 கோடி இலவச பயணம்

கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து கழகங்களில் நிதி சூறையாடப்பட்டு, போக்குவரத்து கழகம் நிதி நெருக்கடியில் இருந்தாலும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்கள். தமிழக பெண்கள் நகரப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற மகத்தான திட்டத்தை வழங்கி, அது சிறப்புற செயல்படுத்தப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இன்று வரை கடந்த ஓராண்டில்,112 கோடி இலவச பயணங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கான நிதியை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.  இவ்வாறு ஏழை, எளிய மக்களுக்கு பாதிக்காத வண்ணம் கட்டண உயர்வில்லாமல் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கி வரும் சூழலில், "கட்டண உயர்வு அட்டவணை தயாராகி விட்டது" என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

click me!