
உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அடிப்படை ஊதியத்தை குறைந்தபட்சம் 20, 700 ஆக உயர்த்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டன.
ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க அரசு முன்வரவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் நேற்றுமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் தனியார் ஓட்டுனர்களை வைத்து பேருந்தை இயக்க அரசு மும்முரம் காட்டி வருகின்றது.
இதைதொடர்ந்து போக்குவரத்து போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்களுக்கு நோட்டிஸ் அனுப்பி போக்குவரட்த்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
மேலும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உடனடியாக பணிக்கு திரும்பவில்லை என்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதைதொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு என கருதப்படும் எனவும் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போக்குவரத்து கழகங்கள் தற்போது பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனவும் பேருந்துகளை நடுரோட்டில் நிறுத்தி விட்டு சென்றுவிட்டனர். இதில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசு நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்துவரும் நிலையில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது கண்டிக்கதக்கது எனவும் குறிப்பிட்டார்.
சேவை மனப்பாண்மையுடன் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் எம்.ஆர். விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.