சென்னை மெரினா கடற்கரையில் ஏழை எளிய வியாபாரிகள் பயன் அடைவதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட நவீன கடைகள், மயிலாப்பூர் சுடுகாட்டில் வைக்கப்பட்ட நிலையில், சமூக விரோதிகள் நவீன கடைகளின் உதிரி பாகங்களை திருடி வருவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பொதுமக்களை கவரும் மெரினா
சென்னையில் உள்ள மெரினா பீச் இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை ஆகும். சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் போது கடற்கரையுடன் நடைபயிற்சி செய்யும் மக்களுக்கு ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும். மெரினாவில் கண்ணகி சிலை, உழைப்பாளர் சிலை உட்பட 10 சிலைகள் உள்ளன. தமிழகத்தை ஆட்சி செய்த முதலமைச்சர்களான அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்கள் இந்த கடற்கரையில் தான் அமைந்துள்ளன. இந்த கடற்கரையை பார்வையிட தினந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு புற்றீசல் போல முளைத்திருக்கும் 500-க்கும் மேற்பட்ட உணவு பொருட்களை விற்கும் கடைகள் மெரினாவில் மட்டுமே உண்டு. இந்த கடைகளை நவீனமாகி வரும் உலக மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் செய்ய முந்தைய அதிமுக அரசு முடிவு செய்தது..
16 கோடியில் நவீன கடைகள்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை விதிமுறைகளை வகுத்து வியாபாரிகளுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது அதன்படி கடந்த அதிமுக அரசு சென்னை மாநகராட்சியின் மூலம் வியாபாரிகளுக்கு நவீன முறையில் பல்வேறு வசதிகளுடன் 16 கோடி ரூபாய் செலவில் 950 கடைகள் தயார் செய்யப்பட்டு வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக சென்னை ஊரடங்கு அமல் படுத்த பட்ட காரணத்தால் வெறும் 52 கடைகள் மட்டுமே மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டன. மீதமுள்ள நவீன கடைகள் வியாபாரிகளுக்கு கொடுக்காமல் மயிலாப்பூர் சுடுகாட்டில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுடுகாட்டில் நவீன கடைகள்
ஏழை-எளிய வியாபாரிகளுக்காக வாங்கப்பட்ட சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பிலான 800க்கும் மேற்பட்ட கடைகள் பட்டினம்பாக்கம் மாநகராட்சி மைதானத்திலிருந்து பல மாதங்களாக வைக்கப்பட்டு இருந்தது. இதனை தற்போது அப்புறப்படுத்தப்பட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள மாநகராட்சி மயானத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சுடுகாட்டிற்குள் புகுந்து கடைகளை உடைத்து இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை திருடிச் செல்லும் அவலமும் ஏற்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட நவீன கடைகளை மயானத்தில் வைத்து சீரழித்து வருவதாகவும் கடற்கரையில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசு அரசியல் வேறுபாடு பார்க்காமல் கடற்கரையில் கடை நடத்துபவர்களுக்கு நவீன கடைகளை பிரித்து வழக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்