
காஞ்சிபுரம்
காணும் பொங்கலை முன்னிட்டு மாமல்லபுரம் கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது . மேலும், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் 300 காவலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
காணும் பொங்கலை முன்னிட்டு இன்று இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில் முன்னெச்சரிகை நடவடிக்கையாக சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் கடலில் குளிக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை பகுதி முழுவதும் 500 மீட்டர் தொலைவுக்கு சௌக்கு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி குளிப்பவர்களை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்புராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி உள்பட 300-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அதேபோன்று, நெரிசலில் காணாமல் போகும் சிறுவர், சிறுமிகள், முதியவர்களை கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் இருந்து காவலாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். 108 அவசர ஊர்தி வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலாளர்களுடன், சாதரண உடையில் காவலாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவலாளர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும், ஆபத்தான கடல் பகுதி என்பதால் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என்றும் மாமல்லபுரம் காவல் ஆய்வாளார் சிரஞ்சீவி சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.