கிருஷ்ணகிரி
முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெறும் தம்பிதுரை நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னை சாலையில் உள்ள அரசு ஆண்கள் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது
இந்த விழாவிற்கான மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், அதிகாரிகளுடன் விழா தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேடைக்கு வரும் பாதை, முக்கிய பிரமுகர்கள் அமரக் கூடிய இடம், பள்ளி மாணவ, மாணவிகள், பயனாளிகள் அமரக் கூடிய இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
அப்போது அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், அசோக்குமார் எம்.பி., சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, உதவி ஆட்சியர் அருண், தாசில்தார் கன்னியப்பன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசிலிதாமஸ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரராகவன், துணை காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 1991-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றிப் பெற்று முதலமைச்சர் ஆனார். எனவே, கிருஷ்ணகிரி அவரது மாவட்டம் ஆகும்.
எனவே மற்ற இடங்களில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை விட இங்கு மிகவும் சிறப்பாக நடத்திட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பப்படி இந்த விழாவை சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது” என்று அவர் கூறினார்.