
தி நகரில் தீவிபத்திற்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்று முழுமையாக இடிக்கப்பட்டு தரைமட்டமானது. இதன் கட்டிட கழிவுகளை அகற்றும் நாளை நடைபெற உள்ளது.
சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் 7 மாடிகளை கொண்ட தி சென்னை சில்க்ஸ் இயங்கி வந்தது. இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை என்ற பெயரில் நகைக் கடை செயல்பட்டு வந்தது.
இந்தக் கட்டிடத்தில் மே மாதம் 31 ஆம் தேதி அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 7 மாடியும் முற்றிலும் சேதம் அடைந்து உருக்குலைந்து போனது.
இதைதொடர்ந்து இந்த கட்டிடத்தை இடிக்கும் பணி ஜா கட்டர் இயந்திரம் மூலம் நடைபெற்று வந்ததது. இந்த பணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அதிக எடை கொண்ட ஜா கட்டர் இயந்திரம் மேலிருந்து கீழே விழுந்தது.
இதில், படுகாயமடைந்த இயந்திர வாகனத்தின் ஓட்டினர் சரத் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து காரணமாக அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததது.
இந்நிலையில் இன்று காலை கட்டடத்தை இடிக்கும் பணி மீண்டும் தொடங்கியது. இதில், சென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு தரை மட்டமானது.
இந்த கட்டிட கழிவுகளை அகற்றும் பணி நாளை நடைபெற உள்ளது.