
திருவள்ளூர்
ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு லாரிகளில் 200 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி புகையிலை பொருட்களை காவலாளர்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் அதிரடி சோதன்னை நடத்தி பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கடத்தல்காரர்களை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர் பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை ஜோராக நடைபெறுவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இதுகுறித்து காவலாளர்கள் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை செங்குன்றத்திற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து லாரிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
மேலும், சோழவரம் அருகே உள்ள சிறுணியம் கிராமம் எதிரே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் பின்புறம் லாரிகள் நிறுத்தும் இடத்தில் அந்த லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து சோழவரம் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணி மற்றும் காவலாளர்கள் பெட்ரோல் பங்க் பகுதிக்கு வாகனங்களில் விரைந்துச் சென்றனர். காவலாளர்களை பார்த்ததும் அங்கிருந்து புகையிலைபொருட்கள் கடத்தி வந்த லாரி ஓட்டுநர்கள் உள்பட பலர் தப்பி ஓடினார்கள்.
அதன்பின்னர், அங்கு நின்றுக் கொண்டிருந்த ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட 18 டயர்கள் கொண்ட ஒரு லாரி மற்றும் இரண்டு லாரிகளில் காவலாளர்கள் சோதனை நடத்தினார்கள். அப்போது அதில் மூட்டை மூட்டையாக குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம் 200 மூட்டைகள் இருந்தன. அவற்றை காவலாளார்கள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். உடன் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா இருந்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.5 கோடி. தப்பிச் சென்ற கடத்தல்காரர்களை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.