குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்க நிதி தர மறுப்பு; மறுப்பை கண்டித்து வெளிநடப்பு…

First Published Jan 14, 2017, 8:55 AM IST
Highlights

கலசபாக்கம்,

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், தனி அலுவலர் குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்க நீதி தர மறுத்ததால், ஊராட்சி செயலாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாற்பத்து ஏழு பஞ்சாயத்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டது துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவி காலம் முடிவடைந்த பிறகு 47 பஞ்சாயத்து ஊராட்சிகளின் நிர்வாகத்தையும் கவனிக்க வட்டார கிராம ஊராட்சி அலுவலர் நூர்பாபு தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 47 ஊராட்சி செயலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

வட்டார வளர்ச்சி அலுவலர் நாகேஷ்குமார் இதற்கு தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில், ஊராட்சி செயலாளர்கள் “தங்கள் கிராம பகுதிகளில் குடிநீர் பிரச்சனை அதிகரித்துள்ளது. இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் குடிநீர் குழாய், மின் மோட்டார் பழுது பார்த்தல் உள்பட பல்வேறு பணிகளுக்காக முன்பணம் வைத்துச் செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதியையும் தர வேண்டும்” என்றுத் தெரிவித்தனர்.

இதற்கு தனி அலுவலர் நூர்பாபு, தற்போது நிதி எதுவும் இல்லை. அதனால் பணம் தர முடியாது என்று திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தார்.

இதனைக் கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் ஆய்வு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர், குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி செயலாளர்கள் கோரியுள்ளனர்.

 

click me!