
தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகள் இனி எந்தெந்த உணவகங்களில் நிறுத்த வேண்டும் என்பது குறித்தான பட்டியலை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் அதேபோல் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் நாள்தோறும் ஏராளமான அரசு விரைவு பேருந்துகளும் தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
பயணத்தின் போது, பேருந்தில் பயணிக்கும் பயணிக்களுக்காக உணவு இடைவேளை, கழிவறை பயன்படுத்தவும் உள்ளிட்ட தேவைகளுக்காக நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள மோட்டல்களில் பேருந்துகள் சில நிமிடங்கள் நிறுத்தப்படும். இவ்வாறு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவுகங்களில் தரமற்ற உணவுகள் மற்றும் அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மோட்டல்களில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் விக்கிரவாண்டியில் உள்ள 5 மோட்டல்களில் அரசுப் பேருந்துகள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அரசு விரைவு பேருந்துகள் நிற்க வேண்டிய உணவகங்கள் குறித்த பட்டியலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து திருச்சி, சேலம் உள்ளிட்ட மார்க்கமாக செல்லும் விரைவுப் பேருந்துகள் குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'சென்னையிலிருந்து நெல்லை, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி, கோவை செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவன் உணவகத்திலும், திண்டுக்கல், காரைக்குடி, சேலம் செல்லும் பேருந்துகள் வசந்த பவன் உணவகத்திலும் நிறுத்த வேண்டும்.
இதேபோல் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் உளுந்தூர்பேட்டை- விழுப்புரம் மார்க்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பலாஜி ஆரியாஸ் உணவகத்தில் நிறுத்தி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நெடுஞ்சாலைகளில் மொத்தம் 18 உணவகங்களில் பேருந்துகளை நிறுத்த அரசு அனுமதித்துள்ளது. குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.தினசரி பேருந்து இயக்கிய விவரம், உணவகத்தில் நின்ற விவரம் உள்ளிட்டவற்றை பணிமனை வாரியாக வாட்ஸ் அப் செயலி மூலம் அனைத்து கிளை மேலாளர்களும் தலைமையகத்திற்கு தெரிவிக்க வேண்டும்' என்று அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.