திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர்: தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்!

By Manikanda PrabuFirst Published Mar 5, 2024, 2:19 PM IST
Highlights

திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர், அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் அல்ல என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது

சென்னை மதுவராயிலை அடுத்துள்ளது திருவேற்காடு. இங்கு பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. அம்மன் ஆலயங்களில் சக்திவாய்ந்த தலங்களாக போற்றப்படும் சமயபுரம், மேல்மலையனூர் கோயில்களுக்கு இணையாக இந்தக் கோயில் போற்றப்படும் இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

தமிழக அரசின் அறநிலையத்துறையின் மேற்பார்வையின் கீழ் உள்ள இக்கோயிலின் கருவறையில் உள்ள கருமாரியம்மன் சிலையில் இருந்த 8 சவரன் மதிப்புள்ள தாலிச் சங்கலி அண்மையில் மாயமாகிவிட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கோயிலில் தின சம்பளத்தின் அடிப்படையில் அர்ச்சகராகப் பணியாற்றும் சண்முகம் என்பவர் அம்மன் சிலையில் இருந்த தாலியை திருடியது தெரியவந்துள்ளது.

Latest Videos

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருவேற்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர், தமிழ்நாடு அரசின் பயிற்சிப் பள்ளியில் பயின்று தேர்வானவர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனை!

இந்த நிலையில், திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர், அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் அல்ல என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. 

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அம்மன் நகையை அக்கோயிலின் தற்காலிக அர்ச்சகர் திருடி அடகு வைத்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த பயிற்சிப் பட்டறையில் தேர்வானவர் என்ற வதந்தி பரப்பப்படுவதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு, அவர் அரசின் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர் அல்ல என விளக்கம் அளித்துள்ளது.

“கருமாரியம்மன் கோயில் நகையைத் திருடிய தற்காலிக அர்ச்சகர், தமிழ்நாடு அரசின் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர் என்பது முற்றிலும் பொய்யானதாகும். இக்கோயிலில் தினக்கூலி அர்ச்சகராக பணியாற்றி வந்தவர், சண்முகம். தனது தந்தை சுப்பிரமணியன் ஐயரிடம் ஆகமப் பயிற்சி பெற்று அதன் அடிப்படையிலேயே பூஜை செய்யும் பணியினை மேற்கொண்டு வந்துள்ளார்.

 

திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர் ‘அரசின் பயிற்சிப் பள்ளியில்’ பயிற்சி பெற்றவர் அல்ல!

Fact checked by FCU | pic.twitter.com/aLag0dQuBg

— TN Fact Check (@tn_factcheck)

 

சண்முகம் இக்கோயிலில் பணியாற்றியபோது, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 57 கிராம் தங்க செயினுடன் கூடிய திருமாங்கல்யத்தைத் திருடி அடகு வைத்துள்ளார். திருமாங்கல்யம் மீட்கப்பட்டு மீண்டும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. தினக்கூலி அர்ச்சகரான சண்முகம்மீது திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு 'முதல் தகவல் அறிக்கை' பதிவு செய்யப்பட்டுள்ளது.” என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

மேலும், தவறான தகவல்களைப் பரப்புவது குற்றச்செயலாகும் எனவும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

click me!