
கோடை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் ஒரு வார காலமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் 104.5°, 106.3°, 108 ° என வெப்பநிலை பதிவாகி வருகிறது. வரும் நாட்களில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்து காணப்படும் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து கோடை காலத்தில் செய்ய வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் பொதுச் சுகாதாரத்துறையும் கோடை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோடை கால நோய்கள் தொடர்பான அவரச உதவிக்கு 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும், பயணத்தின் போது தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும், ஓஆர்எஸ், எலுமிச்சைச் சாறு, இளநீர், பழச்சாறு அருந்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும் எனவும், காற்றோட்டம் உள்ள குளிர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், வெளியே செல்லும்போது காலணி அணிய வேண்டும், மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் 3.30 மணி வரை வெளியில் சுற்றக் கூடாது. வெறுங்காலுடன் நடக்க கூடாது. மதிய வேளையில் வீட்டின் மொட்டை மாடியில் விளையாட கூடாது. செயற்கை குளிர்பானங்கள், மது, புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். உடல் வெப்பம் மற்றும் மனக் குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள். மருத்துவ உதவிக்கு 108 அவரச ஊர்தி சேவையை பயன்படுத்தவும். அவரச உதவிக்கு 104 என்ற எண்னை அழைக்கவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.