தரமற்ற சாலைகள்: நேரடியாக களத்தில் இறங்கும் முதல்வர் ஸ்டாலின் - அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

Published : Sep 19, 2023, 04:39 PM IST
தரமற்ற சாலைகள்: நேரடியாக களத்தில் இறங்கும் முதல்வர் ஸ்டாலின் - அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

சுருக்கம்

சாலை பராமரிப்பு தொடர்பாக நேரடியாக கள ஆய்வில் ஈடுபடப் போவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு முழுவதும் சாலைகள் மோசமாக இருக்கின்றன. முறையான பராமரிப்பின்றி சாலைகள் இருப்பதால், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட பணிகள் காரணமாகவும் சாலைகள் ஆங்காங்கே தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக கிடப்பதால், வாக ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த நிலையில், சாலை பராமரிப்பு தொடர்பாக நேரடியாக கள ஆய்வில் ஈடுபடப் போவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தனக்கு புகார்கள் வந்து கொண்டே இருப்பதாக தெரிவித்தார். அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, சிறு விபத்துக்கள் ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது ஏற்புடையதல்ல எனவும் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

மேலும், “மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மெட்ரோ இரயில் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாக பழைய சாலைகள் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற்றப்படவேண்டும். நம் மாநில சாலைகள் தரமானதாக, மக்கள் பாராட்டப்படும் வகையில் அமைக்கப்படவேண்டும். இதனை வெறும் அறிவுரையாக மட்டும் நான் கூறவில்லை. அமைச்சர்களும், அரசு செயலாளர்களும், தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.” என கேட்டுக் கொண்டார்.

சாலை பராமரிப்பு தொடர்பாக நேரடியாக தாமே கள ஆய்வில் ஈடுபடப்போவதாகவும், பணி முன்னேற்றம் தொடர்பான கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.

மோடி தான் பிரதமராக வரவேண்டும் என தொண்டர்களின் விருப்பம்.! ஆர். பி உதயகுமார் கருத்தால் அதிமுகவிற்குள் குழப்பம்

இந்த வாரத்தில் சென்னையில் ஆய்வு நடத்தவுள்ளதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “இனி சுற்றுப்பயணம் செய்யும் அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக நான் ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறேன். சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்கவேண்டும்.” எனவும் கண்டிப்போடு தெரிவித்துக் கொண்டார்.

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல் புகார்.! KN நேருவின் அஸ்திவாரத்தை அசைக்கும் ED! சிக்கப்போகும் அதிகாரிகள்.!
Jayalalithaa Assets: ஹைதராபாத்தில் ஜெயலலிதா சொத்துக்களை கவனிப்பது யார்? தொடரும் மர்மம்!