
தக்காளி விவசாயத்தில் ஏற்படும் பற்றாக்குறையப் போக்கும் வகையில் ஆண்டு முழுவதும் தக்காளி விவசாயம் நடக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்க தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பேசியதாவது:
தக்காளி சாகுபடி
தமிழகத்தில் தக்காளி பயிர் சாகுபடி 53 ஆயிரம் எக்டேரில் பயிற் செய்யப்பட்டு, ஆண்டுக்கு, 16லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. சந்தைப்படுத்துதலில் ஏற்படும் விலை ஏற்றத்தாழ்வுகளால் தக்காளி பயிரிடும் விவசாயிகள் பெரும்பாலான நேரங்களில் இழப்பையேச் சந்திக்கிறார்கள்.
தக்காளி விளைச்சல் குறைவாக இருக்கும் மே, ஜூன், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சாகுபடியை அதிகரிக்கும் விதத்தில்விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக அல்லது இடுபொருட்களாக ஏக்கருக்கு ரூ.8ஆயிரம் மானியத்தில் 5ஆயிரம் ஏக்கரில் ரூ4 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும்.
இஞ்சி, பூண்டு சாகுபடி
உள்நாட்டு, அயல்நாட்டு சந்தைகளில் இஞ்சி, பூண்டு, மஞ்சளுக்கு நல்ல தேவை இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, உழவு நடவுக்குரிய விதைக் கிழங்குகள், இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்படும்.ரூ.3 கோடியில் 6,500 ஏக்கரில் செயல்படுத்தப்படும்.
பூண்டு சாகுபடி கல்வராயன் மலை, சேர்வராயன் மலைப்பகுதிக்கும் விரிவுபடுத்தப்படும்.ஏக்கருக்கு ரூ.8ஆயிரம் வீதம், 1,250 ஏக்கரில் ரூ.ஒருகோடி நிதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்
பாரம்பரிய ரகங்கள்
தோட்டக்கலைத் துறையில் பாரம்பரிய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சேகரிக்க, மீட்டெடுக்க, பாதுகாக்க சேகரிப்பு மையங்கள் தோட்டக்கலை பண்ணைகளில் ஏற்படுத்தப்படும். இதற்குத் தேவையான காய்கறி விதைகள் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உருவாக்கப்பட்டு, வீட்டுத்தோட்டம் பயிரிட விரும்பும் மக்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக ஏக்கருக்கு ரூ.8ஆயிரம் வீதம், 2500 ஏக்கரில் ரூ.2 கோடி செலவில் மத்திய அரசு உதவியுடன் செயல்படும்.
மூலிகைத் தோட்டம்
2022-23ம் ஆண்டில் 4 ஆயிரம் வீடுகளில் மூலிகைத் தோட்டம் அமைக்க அரசு உதவி புரியும். இதற்காக ரூ.ஒருகோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான மூலிகைச்செடிகள் அரசு பண்ணைகளில் இருந்து உற்பத்தி செய்து தரப்படும்.
மாலையிலும் உழவர் சந்தை
தமிழதத்தில் உள்ள உழவர் சந்தைகள் தற்போது காலை நேரத்தில்மட்டுமே செயல்பட்டு வருகின்றன. காய்கறிகள் வாங்க ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கவும், மாலை நேரத்திலும் சந்தை செயல்பட வேண்டும் என்று மக்களும், விவசாயிகளும் வைத்த கோரிக்கையைபரிசீலித்து மாலை நேரத்திலும் உழவர் சந்தை செயல்படும். மாவட்டத்துக்கு ஒரு சந்தைவீதம், அங்குசிறு தானியங்கள், பயறுவகைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
வேளாண் தொழில்முனைவோருக்குநிதி
கிராமப்புற வேளாண் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில், விளை பொருட்களை மதிப்புக் கூட்டுதல், உணவுப்பதப்படுத்துதல், வேளாண் சார்ந்த தொழில்களை மேற்கொள்ள 50% மானியத்தில், அதிகபட்சமாக ரூ5லட்சம் வரையில் மானியம் விவசாயிகளுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் வழங்கப்படும். வரும் நிதியாண்டில் 50 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்