டிடிவி தினகரனின் குரு... மூக்குபொடி சித்தர் காலமானார்!!!

By vinoth kumarFirst Published Dec 9, 2018, 10:10 AM IST
Highlights

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மூக்குப்பொடி சித்தர் அதிகாலை 5 மணிக்கு காலமானார். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் மூக்குப்பொடி சித்தரின் உயிர் பிரிந்தது. இவர் டிடிவி தினகரனின் ஆஸ்தான குருவான திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மூக்குப்பொடி சித்தர் அதிகாலை 5 மணிக்கு காலமானார். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் மூக்குப்பொடி சித்தரின் உயிர் பிரிந்தது. இவர் டிடிவி தினகரனின் ஆஸ்தான குருவான திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திருவண்ணாமலை புன்னிய ஸ்தளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு கோயிலில் பல சாமியார்கள், ஆன்மிக குருக்கள் வாழும் ஒரு இடமாக இருக்கின்றது. இதில் மிகவும் பிரசிதிப்பெற்றவர் இந்த மூக்குப்பொடி சித்தர். மூக்குப்பொடி சித்தர் ஆச்சர்யமான மனிதர். உண்மையில் அவர் சாமியார் அல்ல, சித்தர் என்கிறார்கள். கோவிலோ தனிப்பட்ட இடம் என்றோ அவருக்கு எதுவும் கிடையாது. விரும்பும் இடத்தில் விரும்பிய கோலத்தில் தங்குவது அவர் சுபாவம். எங்கிருந்தாலும் பக்தர்கள் அவரைத்தேடி ஓடிவிடுவார்கள். 

இந்த யூகத்தில் சாமியார்கள் என்றாலே தனக்கென ஒரு மடம் அல்லது கோவில் அமைத்துக்கொண்டு பக்தர்களிடம் பணம் வேட்டையை நடத்துவார்கள். ஆனால் இந்த மூக்குப்பொடி சித்தர் கோவில், மடம் என எதையும் ஏற்படுத்திக்கொள்ளாதவர். அவருக்கு கார், பங்களா என சொகுசு வாழ்க்கையை ஏற்படுத்தித்தர செல்வாக்கு படைத்த பக்தர்கள் பலர் தயாராக இருந்தும் அவர் விருப்பம் கோவில், குளம், தெரு வீதிதான். இப்படி வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்டவர் அவர். 

தரிசனத்துக்காக பல பெரிய விஐபிக்கள் பணத்தைக் கட்டுகட்டாக தட்டில் வைத்து காத்து நிற்பார்கள். ஆனால், அவர்களைப் பொருட்படுத்தமாட்டார். துாரத்தில் வெறும் வெற்றிலைப் பாக்குத் தட்டு வைத்தபடி இருக்கும் ஒருவரை அழைத்துப் பார்ப்பார். எத்தனை மணிநேரம் காத்திருந்தாலும் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அவர் விரும்பினால் மட்டுமே ஆசிர்வாதம் செய்வார். அவரது ஆசிர்வாதம் என்பது வித்தியாசமானது. கண்ணைத்திறந்து ஒரு பார்வை பார்த்தால் அதுதான் அவரது ஆசிர்வாதம். அதனாலேயே அவர் எப்போது கண்திறந்துபார்ப்பார் என பக்தர்கள் காத்துநிற்பார்கள். பலரை பார்க்காமலேயே அனுப்பிவைப்பார். பல மணிநேரங்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் அவர்கள் செல்வார்கள். அரிதாகத்தான் பக்தர்கள் பணம் தந்தால் பெற்றுக்கொள்வார். அப்போதே அதை ஏழ்மையான பக்தர்கள் யாருக்காவது தந்துவிடுவார். 

அவரை வெளியில் கொண்டுச்செல்ல கார்கள் அணிவகுத்து நின்றாலும் நடந்தேசெல்வார். திடீரென ஆட்டோ, லாரி, சைக்கிள், பைக் என ஏதோ ஒரு வாகனத்தை நிறுத்தி ஏறி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பார். மேலும் மூக்குப்பொடி சித்தர் இன்னும் பிரபலம் அடைய முக்கிய காரணமானவர் டிடிவி தினகரன். கட்சியில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த போது இந்த மூக்குப்பொடி சித்தரை டிடிவி.தினகரன் சந்தித்தார். டிடிவி தினகரன் அடிக்கடி நேரில் சந்தித்து ஆசி பெற்று வந்தார். சித்தரின் ஆஸ்ரமத்திற்கு சென்று தியானம் செய்வது வழக்கமாக வைத்திருந்தார். மூக்குபொடி சித்தர் சொல்வது தான் என் வேத வாக்கு என்பது போல் டிடிவி தினகரன் செயல்பட்டு வந்தார். 

இந்நிலையில் மூக்குபொடி சித்தர் கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்து சென்ற போது தடுக்கி விழுந்ததாகவும், அப்போதிருந்து அவர் உணவு எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும், உடல் நிலை தேறுவதில் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 5.00 மணி அளவில் மூக்குபொடி சித்தர் இறைவனடி சேர்ந்துள்ளார். இவருக்கு மரியாதை செல்லும் விதமாக டிடிவி தினகரன் திருவண்ணாமலைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

click me!