விழுப்புரம்
அரசு அதிகாரியின் ஜீப்பில் புதுச்சேரியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சாராய பாட்டில்களை கடத்திய மூவரை விழுப்புரத்தில் காவலாளர்கள் சோதனையின்போது கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளார் குமணன் தலைமையிலான காவலாளர்கள் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த வழியாக வந்த அரசு ஜீப்பை நிறுத்தி சோதனை நடத்தியதில் அந்த ஜீப்பில், புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் விற்பனை செய்யக் கூடிய 54 சாராய பாட்டில்கள் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜீப்பில் வந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து காவலாளர்கள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கரியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (19), பெரியசாமி மகன் கலைச்செல்வன் (18), மூக்கன் மகன் கிருஷ்ணமூர்த்தி (20) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் புதுச்சேரியில் இருந்து அரசு ஜீப்பில் சாராய பாட்டில்களை கள்ளக்குறிச்சிக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
சாராய பாட்டில்கள் கடத்துவதற்கு அரசு ஜீப் எப்படி கிடைத்தது? என்பது குறித்து காவலாளர்கள் விசாரணை நடத்தினர். அதில், கள்ளகுறிச்சி வேளாண்மை உதவி இயக்குனராக பணியாற்றுபவர் கோவிந்தன். இவருக்கு வேளாண்மைத்துறையின் பணிகளை கவனித்துக் கொள்வதற்காக அரசு சார்பில் ஜீப் வழங்கப்பட்டுள்ளது. இவருடைய பேரனான ப.கிருஷ்ணமூர்த்தி, தனது நண்பர்களுடன் ஜீப்பில் சாராய பாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து மூவரையும் காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாராய பாட்டில்கள் மற்றும் அதனைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட ஜீப் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.