இந்த வருடம் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் - TNSTC வலியுறுத்தல்...

By Suresh ArulmozhivarmanFirst Published Sep 1, 2018, 9:59 AM IST
Highlights

பாரபட்சமின்றி போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் 25% போனஸ் தரவேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தொழிலாளர் சம்மேளனத்தினர் (TNSTC) வலியுறுத்தியுள்ளனர்.
 

தஞ்சாவூர்

பாரபட்சமின்றி போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் 25% போனஸ் தரவேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தொழிலாளர் சம்மேளனத்தினர் (TNSTC) வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூரில் உள்ள போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மேலாண்மை இயக்குநரிடம், TNSTC சார்பில் ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் தாமரைச் செல்வன், மத்திய சங்கத் துணைத் தலைவர் அழகிரி, ஓய்வுப் பெற்றப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் அப்பாதுரை ஆகியோர் நேற்று மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், "1965-ஆம் ஆண்டு ஊக்கத் தொகை (போனஸ்) பட்டுவாடா சட்டப் பிரிவு 9-ன் படி 2017-18 நிதியாண்டில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 30 நாள்கள் பணியாற்றிய தொழிலாளர்கள் எல்லாருக்கும் பிரிவு 12-ன்படி பெற்றுவரும் ஊதிய நிலைக்கு ஏற்ப 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

சேமநல ஓட்டுநர்,  நடத்துநர்கள்,  தொகுப்பூதியப் பணியாளர்கள் ஆகியோர் நிரந்தரப் பணியாளர்கள் செய்துவரும் வேலையை செய்து வருகின்றனர். விடுப்புச் சலுகை கூட ஏதுமின்றி நிரந்தரப் பணியாளர்களை விடவும் அதிகமாக இவர்கள் பணி செய்கின்றனர். 

எனவே, இவர்களிடையே பாகுபாடு, பாரபட்சம் போன்றவை காட்டுவது சரி அல்ல. இவர்களுக்குக் கருணைத் தொகை மற்றும் போனஸ் இரண்டும் சேர்த்து வழங்க வேண்டும்.

ஒப்பந்த முறையில் வேலைச் செய்யும் பாதுகாவலர்கள், உணவகங்களில் வேலை புரிவோர், பேருந்து கூடு கட்டும் தொழிலாளர்கள், பேருந்து நிலையங்களில் வேலை செய்யும் டிக்கெட் கேன்வாசர்கள் ஆகியோர் 30 நாள்களுக்கு மேல் தொடர்ந்து பல வருடங்களாக வேலை செய்துவருகின்றனர். 

மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்தத் தொழிலாளர்களுக்கு 2017 - 18-ஆம் நிதியாண்டில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எந்தவித பாகுபாடுமின்றி 25% போனஸ் வழங்க வேண்டும்" என்று அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருந்தனர்.

அதனைப் பெற்றுக் கொண்ட போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மேலாண்மை இயக்குநர் இதுகுறித்து அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

click me!