4 வயது சிறுவன் லாரி ஏறியதில் உடல் நசுங்கி சாவு; தாய், தந்தை கண்முன்னே மகன் இறந்த சோகம்...

By Suresh ArulmozhivarmanFirst Published Sep 1, 2018, 8:59 AM IST
Highlights

தஞ்சாவூரில் மொபட்டில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது பின்னால் வேகமாக வந்த லாரி மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த நான்கு வயது சிறுவன் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், தாய், தந்தை கண்முன்னே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். 
 

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மொபட்டில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது பின்னால் வேகமாக வந்த லாரி மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த நான்கு வயது சிறுவன் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், தாய், தந்தை கண்முன்னே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், வடக்குத் தெருவில் வசிப்பவர் அன்பழகன் (34). இவரது மனைவி புவனேஸ்வரி. மகன் முகுந்தன் (4).

நேற்று முன்தினம் மாலை அன்பழகன் தனது மனைவி மற்றும் மகன் முகுந்தைனை மொபட்டில் அழைத்துக் கொண்டு செட்டிமண்டபம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி மொபட் மீது மோதியது. 

இதில் நிலைதடுமாறிய அன்பழகன் மொபட்டை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால், மனைவி புவனேஸ்வரி மற்றும் மகன் முகுந்தன் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டனர். அப்போதும் லாரி நிற்காமல் வந்தது. முகுந்தன் மீது பின்னால் வந்த லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது.

இதில், முகுந்தன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாய், தந்தை கண்முன்னே மகன் பரிதாபமாக உயிரிழந்தார். புவனேஸ்வரியும் பலத்த காயம் அடைந்தார். 

தனக்கு அடிப்பட்டு ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளபோதும், இறந்த மகனின் உடலைப் பார்த்து தாயும், தந்தையும் கதறி அழுதனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தாலுகா காவலாளர்கள் முகுந்தனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள், லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இதுகுறித்த விசாரணையையும் தொடங்கி உள்ளனர்.

 

click me!