திருப்போரூர் கோவில் முன்பு அனாதையாய் தவிக்கும் மூதாட்டி…. பெற்ற தாயை மகன்களே பிச்சை எடுக்கவிட்ட கொடுமை…

First Published Jun 29, 2017, 8:01 AM IST
Highlights
thiruporur temple ..old lady begger


திருப்போருர் முருகன் கோவிலுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆட்டோவில் வந்த 2 பேர், 82 வயது மூதாட்டி ஒருவரை வாசல் முன்பு வீசி எறிந்துவிட்டு சென்றனர்.

இன்று அவர் நடுங்கும் குளிர், கொளுத்தும் வெயில் என பாராமல் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார், நல்லவேளையாக அந்த மூதாட்டியை விட்டுச் சென்றவர்கள் தட்டு, டம்ளர், மாற்றுத் துணி போன்றவற்றை கொடுத்துவிட்டுச் சென்றனர்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டையில் வசதியாக வாழ்ந்து வந்த இவரை திருப்போரூர் கோவிலில் எறிந்துவிட்டுச் சென்றவர்கள் அந்த மூதாட்டி பெற்ற மகன்கள் தான்.

கடந்த 2007ஆம்  ஆண்டு குப்பம்மாளின் கணவர் இறந்து போனதையடுத்து தனது மூத்த மகன் மற்றும் முதல் மகளுடன் வசித்து வந்தார். ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டிக்கு ஆதரவளித்த அந்த மகனும், மகளும் இறந்து போயினர்.

குப்பம்மாளுக்கு வேறு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்த நிலையில் அவர்கள் அந்த மூதாட்டியை யாரும் ஒழுங்காக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

இரண்டு மருமகள்களும் குப்பம்மாவை தங்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் துரத்திவிட்டனர். தனது மற்றொரு மகளும் குப்பம்மாவை தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

இப்படி ஆதரவற்ற நிலையில் தள்ளாடும் வயதில் இருந்த குப்பம்மாவை, அவரது இரு மகன்களும் ஆட்டோவில் அழைத்துச் சென்று திருப்போருர் முருகன் கோவில் வாசலில் வீசி எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தும் இன்று குப்பம்மாள் பிச்சை எடுத்து தன் வயிற்றை கழுவிக் கொண்டிருக்கிறார்.

தற்போது அந்த மூதாட்டிக்கு ஆதரவளித்து வரும் இளைஞர் ஒருவர் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதேநேரத்தில் பெற்ற தாயை பிச்சை எடுக்க விட்ட மகன்கள் மற்றும் மகள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மூதாட்டியைப் பொறுத்தவரை தாய்ப் பாசம், அன்பு, மனித நேயம் எல்லாம் செத்துப் போய்விட்டதாகவே கருதுகிறார். இது போன்று லட்சக்ணக்கான தாய்மார்கள் ஆதரவற்ற நிலையில் இன்றும் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

click me!