
பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் எஸ் யுவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், மதுரை மாவட்டத்தில் இருக்க கூடிய திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று இஸ்லாமியர்கள் எந்த வித அடிப்படையும் இல்லாமல் சொந்தம் கொண்டாடி, பிரச்சனை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானின் மலை அந்த மலையை காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோவில் வரை பிப்ரவரி 18 ம் தேதி வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரியிருந்தாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக, கையில் வேல் ஏந்தி பேரணி நடத்த காவல்துறை அனுமதி கோரி மனு அளித்தும் இதுவரை காவல்துறை அனுமதியளிக்கவில்லை என்பதால் பிப்ரவரி 18ம் தேதி வேல் யாத்திரை நடத்த அனுமதிக்க வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா
ஆஜராகி. திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் குறித்து பேரணி நடத்த மனுதாரர் அனுமதி கோருகிறார். ஏற்கனவே 05.02.2025அன்று சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் இந்து முன்னனி சார்பில் போராடம் நடத்த அனுமதி வேண்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, மத கலவரங்களை தூண்டும் வகையில் ஊர்வலத்தினர் முழக்கங்களை எழுப்பக் கூடாது என்கிற நிபந்தனையுடன் அனுமதியளித்தது. நீதிமன்றம் உத்தரவையும் மீறி பொது அமைதிக்கும் மத நல்லிணத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதால் முழக்கங்கள் எழுப்பியவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர் கேட்கக்கூடிய வழிப்பாதை மிகவும் நெருக்கடியான போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை. ஏற்கனவே உரிமை குறித்து பிரிவி கவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல. 1931ம் ஆண்டே மதுரை சப் கோர்ட்டில் ”நெல்லித்தோப்பு, சிக்கந்தர் தர்கா , கொடிமரம், மலையேறும் வழிப்பாதை இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என தீர்ப்பிளித்துள்ளது. அந்த தீர்ப்பிற்கு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம் அதன் பின்னர் பிரிவி கவுன்சில் வரை சென்று மதுரை சப் கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இஸ்லாமியர்கள் அவர்களுடைய இடத்தில் வேண்டுதலுக்காக ஆடு கோழி பலியிட்டு படைத்து உண்ணுவது இதுவரை வழக்கமாக உள்ளது என அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரித்த ஆர்.டி.ஓ அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சி ஆட்சிதலைவரும் இந்த பழக்கம் நடைமுறையில் உள்ளதை அரசுக்கு தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கூட பிராணிகளை பலியிடுவது வழக்கமாக உள்ளது உதாரணத்திற்கு
* மேலூர் வட்டம், அழகர் கோவில், 18ம் படி கருப்பச்சாமி திருக்கோவில்
* மதுரை கிழக்கு வட்டம், பாண்டிமுனிஸீவரர் கோவில்,
* வளையாங்குளம் மலையாண்டி கருப்பச்சாமி திருக்கோவில்
* கிராமங்களில் உள்ள எல்லை காவல் தெய்வங்கள்.
மேலும் கடந்த 18.01.2025 அன்று மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் என்ற பெயரில் பிராணிகளை பலியிட்டு தர்காவில் சமபந்தி விருந்திற்கு அழைப்பு விடுப்பது போன்று சில சமூக விரோதிகள் பொய்யான பதிவினை வெளியிட்டுள்ளார்கள். இது சம்பந்தமாக மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களிடையே நிலவும் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் விதத்தில் சமூக விரோதிகள் திட்டமிட்டு இச்செயல்களை செய்து வருகின்றனர்.
காலங்காலமாக திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மக்கள் இந்து, முஸ்லீம் மற்றும் ஜெயின் ஆகியோர் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். மதத்தால் மற்றும் இனத்தால் என்றென்றும் தமிழ்நாடு மக்கள் ஒரே குடும்பத்தினராக தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்றனர். இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதர சகோதரிகளாகவே இன்று வரை வாழ்ந்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலையை ஓர் காரணமாக்கி இந்து முஸ்லீம்களிடையே தேவையற்ற கலவரங்களை உருவாக்கி மக்களின் ஒற்றுமை குலைந்து விடக்கூடாது.
தமிழ்நாட்டில் கோவில் நகரமாக அழைக்கப்படும் மதுரை மத நல்லிணத்திற்கு பெயர் பெற்ற புனித தலமாகும். கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள சுல்தான் அலாவுதீன் தர்காவில் இன்று வரை இந்து மதத்தை சேர்ந்த செங்குன்ற முதலியார் சமூக மக்களால் வழங்கப்படும் கொடிதான் ஏற்றப்படுகிறது. சமீபத்தில் கூட, மதுரைக்கு அருகிலுள்ள காரைக்குடியில் உள்ள ஒரு இந்து கோவில் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லீம் மதத்தினர் சீர்வரிசை, நன்கொடை வழங்கினார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முஸ்லீம் சமுதாயத்தினர் விநாயக சதுர்த்தி விழாவினை கொண்டாடி ஏறக்குறைய ஆயிரம் இந்து சமுதாயத்திற்கு அன்னதானம் வழங்கினார்கள். திருப்பூர் ஒத்தப்பாளையம் கிராமத்தில் முஸ்லீம் சமுதாயத்தினர் ஒரு விநாயகர் கோவில் அமைக்க 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியதோடு அக்கோவில் குடமுழுக்கு விழாவில் இரு சமுதாயத்தினரும் ஒன்றாக பங்குக் கொண்டு சிறப்பாக விழா நடத்தினார்கள். நாகூர் தர்கா கந்தூரி விழாவில் போத்தப்படுகிற போர்வை பழனியாண்டி பிள்ளை பரம்பரையிலிருந்து தான் இன்று வரை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மத நல்லிணத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் என்றும் பெயர் பெற்றது. மத வேறுபாடின்றி மக்கள் ஒரே சமுதாயமாக வாழ்ந்து வருகின்றனர். மத நல்லிணக்கத்தை காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் ஒவ்வொருவரின் மத நம்பிக்கையை பாதுகாப்போம் என்றும் யாருடைய மத வழிபாட்டிலும் நாங்கள் தலையிட மாட்டோம் என்றும் தடுக்க மாட்டோம் என்றும் உறுதிப்பட தெரிவித்தார். இது போன்ற போராட்டங்களால் மத நல்லிணக்கம் பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இத்தருணத்தில் மனுவில் கோரியுள்ளவாறு 18.02.2025 அன்று ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும் என தனது கடுமையான எதிப்பினை தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பேரணி நடத்த கேட்டுள்ள இடம் கூட்ட நெரிசல் மிகுந்தது என்றும் திருப்பரங்குன்றம் அந்த பிரச்சனைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்றும் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் என கண்டனம் தெரிவித்தார். வேறு இடத்தை தேர்வு செய்து தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி உத்தரவினை நாளை ஒத்தி வைத்துள்ளார்.