ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நடத்தி வரும் பள்ளிக்கூட கட்டுமானத்திற்கு அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து மணல் எடுத்ததாக தொடரப்பட்ட புகாரில் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
ஓ.ராஜாவும் புகாரும்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா,இவர் மேல் ஏற்கனவே பல புகார்கள் உள்ளன. குறிப்பாக தேனி மாவட்டம் பெரியகுளம் நுகர்வோர் அமைப்பின் நிர்வாகியான துரை, பெரியகுளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மணல் கொள்ளையடிக்கப்படுவதை எதிர்த்து மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ச்சியாகப் புகார் தெரிவித்து வந்தார். இதன் காரணமாக துரையை மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து தன்னை தாக்க தூண்டிய ஓ.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய கோரி நீதிமன்றத்திலும் முறையிட்டார் .நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா தலைவராக உள்ள தேனி ஆவின் நிறுவனத்தில் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் ஆவின் தொழிலாளர்கள் புகார் அளித்திருந்தனர். இது போன்ற பல்வேறு புகாரில் சிக்கிய ஓ.பி.ராஜ இரண்டு முறை அதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
மணல் கடத்தல் புகார்
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் சசிகலாவை சந்தித்து பேசிய காரணத்தால் ஓ.ராஜா கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அப்போது அதிமுக தலைமைக்கு எதிராக புகார் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் ஓ ராஜாவுக்கு சொந்தமான பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் தேவையான மண்ணை பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து அனுமதியின்றி வெட்டியெடுத்து பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கடந்த மாதம் 14ம் தேதி பிரபு என்பவர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார். இதையடுத்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன், இந்த புகார் மீது தாலுகா அளவிலான கண்காணிப்புக்குழு கள ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். வருவாய் இழப்பு, சுகாதார சீர்கேடு தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தாலுகா அளவிலான கண்காணிப்பு குழு அலுவலர்கள், புகார் மனுதாரருடன் தணிக்கை மேற்கொண்டு, ஆய்வுக் கூட்டம் நடத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விபரங்களை கலெக்டர் தலைமையில் நடக்க உள்ள கூட்டத்திற்கு முன்பாக புகைப்படங்களுடன் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
நித்தி ரிட்டர்ன்ஸ்..!! கைலாசா கொடுத்த அப்டேட்.. சமாதி நிலையில் இருந்து மீளும் நித்யானந்தா..!