நித்தி ரிட்டர்ன்ஸ்..!! கைலாசா கொடுத்த அப்டேட்.. சமாதி நிலையில் இருந்து மீளும் நித்யானந்தா..!

By Ajmal KhanFirst Published Jun 7, 2022, 12:26 PM IST
Highlights

கடந்த சில மாதங்களாக உயிருக்கு போராடி வந்த நித்யானந்தா விரைவில் மக்கள் முன் வர இருப்பதாக கூறி இருப்பது அவரது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

சர்ச்சையும் நித்தியானந்தாவும்

உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரமங்களை தொடங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தவர் நித்யானந்தா, திருவண்ணாமலையில் தனது முதல் ஆசிரமத்தை தொடங்கியவர் உலகம் முழுவதும் தனது கிளையை பரப்பினார். நித்யானாந்தவின் பேச்சால் மயங்கி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆசிரமத்திலேயே தங்க தொடங்கினர். பிரபல நடிகையுடன் ஒன்றாக இருப்பது போல் வெளியான வீடியோவால் மேலும் பிரபலமடைந்தார் நித்யானந்தா. இது மட்டுமில்லாமல் நித்யானந்தா ஆசிரமத்தில் பாலியல் புகார்களும் எழுந்த காரணத்தால் வழக்கு பதிவு செய்து சிறையிலும் நித்யானந்தா அடைக்கப்பட்டார். இதனையடுத்து சிறிது காலம் மதுரை ஆதினத்தில் தங்கியிருந்தவர் மதுரை ஆதினத்தை கைப்பற்றவும் முயற்சி செய்தார் இந்த பரபரப்புக்கு மத்தியில் கைலாசா என்கிற நாட்டை உருவாக்கியுள்ளாதாக நித்யானந்தா அறிவித்தார். 

சமாதி நிலையில் நித்யானந்தா

கடந்த சில மாதங்களாக நித்யானந்தா பற்றி தகவல் வெளியாகாத நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு நித்யானந்தா இறந்து விட்டதாக தகவல் பரவியது. உடல் மெலிந்து சோர்வான நித்திக்கு கல்லீரல் அலர்ஜீயும், சிறுநீரக தொந்தரவும் ஏற்பட்டுள்ளது. போக போக நுரையிரல் தொற்றுவரை சென்று தற்போது மூச்சு விட முடியாமல் ஆக்சிஜன் உதவியுடன் இருந்து வருவதாக தகவல் பரவியது. இந்திய அரசால் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி என்பதால் நித்தியானந்தாவால் கோடி கணக்கில் பணம் இருந்தும், தனி விமானம் இருந்தும் சிகிச்சைக்காக வேறு எங்கும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இது போன்ற தகவல் வெளியான நிலையில் நித்யானந்தா  தான் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தன்னை 27 பேர் கொண்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியிருந்தார். மேலும் தனக்கு புற்று நோய் அல்லது கட்டி எதுவும் இல்லை, இதய பிரச்சினை எதுவும் இல்லை. கொழுப்பு, கல்லீரல் பிரச்சினை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என எந்த பிரச்சினையும் இல்லை என கூறியுள்ளார்.  இருந்த போதும்  என்னால் உணவு உட்கொள்ள முடியவில்லை. நான் எந்த உணவையும் வாயில் தள்ள முயன்றால் சில நிமிடங்களில் வாந்தி எடுக்கும் நிலை உள்ளதாகவும்,  இதே போல எனக்கு உறக்கமும் இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  உடலில் எந்த அசைவும் நிகழவில்லையென கூறியுள்ளவர், நித்ய சிவ பூஜைக்கு மாறாக நிர்விகல்ப சாமாதியில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

ரீ.என்ட்ரி கொடுக்கும் நித்யானந்தா

இதனையடுத்து தன்னிடம் அதிகமான பணம் உள்ளதாகவும், எனவே யாரும் தனக்கு பணம் அனுப்ப வேண்டாம் என கேட்டிருந்தார். அதற்க்கு பதிலாக தனது பக்தர்கள் தங்களது புகைப்படத்தை பதிவிடுமாறு கூறியிருந்தார். இந்தநிலையில் தற்போது புது பதிவை தனது முகநூலில் நித்யானந்தா வெளியிட்டுள்ளார், அதில், எனது அன்புள்ள பக்தர்கள் மற்றும் கைலாசவாசிகளுக்கு, தற்போது வரை ஆழமான சமாதியில் ஆழ்ந்திருக்கும் நான், என் பக்தர்களோடு உள்ளுணர்வில் இணைந்திருக்கிறேன். அதை நான் மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறேன். விரைவில் அனைத்தும் சரியாகி, என் வழக்கமான உடல்நிலை உடன் எனது சத்சங்கத்தை தொடங்குவேன். எனது தரிசனங்கள் இனி தடையில்லால் கிடைக்கும். இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், என கூறியுள்ளார். இந்த தகவலை பார்த்த நித்யானந்தா பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். அதேவேளையில் நித்யானந்தா மீண்டும் எந்தவகையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆடியோ பதிவை மட்டும் நித்யானந்தா வெளியிடுவாரா? அல்லது தனது பேச்சை நேரலை செய்வாரா என அவரது பக்தர்களும் டிரோல் செய்பவர்களும் காத்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

ஒரே ஒரு நாள் ஊழல் இல்லாத ஆட்சி நடத்த முடியுமா? ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு -ஸ்டாலினை சீண்டும் அண்ணாமலை

 

click me!