
மதுரை
மதுரையில் இரயில்வே டிராக் அமைக்கும்போது குடிநீர் குழாயை உடைத்ததால் தண்ணீர் இன்றி தவிக்கும் கிராம மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் குடிநீர் குழாயை சரிசெய்யாததால் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொட்லுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட போலியம்பட்டி கிராமத்தின் வழியாக இரயில்வே டிராக் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்தப் பணியின்போது கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாயை உடைந்துவிட்டதால் போலியம்பட்டி கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதனால் அந்த கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் பலமுறை செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அங்குள்ள அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், நேற்று போலியம்பட்டி கிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரளாக கூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.