உச்சநீதிமன்றம் தீர்ப்பை தெளிவாக கூறியதால் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு எதுவும் பதியப்படாது என திருச்சி காவல் துறை துணை ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் மாணவி அனிதா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே திருச்சியில் இன்று நீட் தேர்வை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்திருந்தது. இதற்கு காவல் துறையும் அனுமதி வழங்கியிருந்தது.
இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுகரசர், முத்தரசன், கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தனர்.
ஆனால் உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்ட தீர்ப்பில் பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் உள்ள போராட்டத்திற்கு மாநில அரசு அனுமதி தரக்கூடாது என தெரிவித்தது.
இதனால் திமுகவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாக திருச்சி காவல்துறை துணை ஆணையர் நோட்டிஸ் அனுப்பினார்.
ஆனாலும் காவல்துறையின் தடையையும் மீறி திமுக பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறார் ஸ்டாலின்.
இதனிடையே உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்தது. அதில் சட்ட ஒழுங்கு சீர்குழையாமல் நடக்கும் போராட்டத்துக்கு தடை இல்லை எனவும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு எனவும் தெரிவித்தது.
இதையடுத்து உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியதால் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு எதுவும் பதியப்படாது என திருச்சி காவல் துறை துணை ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.