
துவரங்குறிச்சி அருகே வனப் பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாணக் கோலத்தில் கிடந்தார்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகேயுள்ளது பில்லுப்பட்டியை ஒட்டியுள்ள தச்சமலை வனப்பகுதியில் நேற்று காலை ஆடு, மாடுகளை மேய்க்கச் சென்றவர்கள் அங்கு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் அரை நிர்வாணமாக கிடந்ததை கண்டனர். அந்த பெண்ணின் சடலத்தின் அருகிலேயே ரத்தம் படிந்த நிலையில் பாறாங்கல் ஒன்று கிடந்தது. ரோஸ் கலர் சுடிதார் அணிந்திருந்த அந்த இளம்பெண்ணின் உடைகள் கலைந்து அரை நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.
அந்தப் பெண்ணின் துப்பட்டா தனியாக கிடந்தது. அப்பெண்ணின் முகம் கற்களால் தாக்கியும், கத்தியால் குத்தியும் சிதைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட எஸ்.பி. ஜியாஉல்ஹக் மற்றும் மருங்காபுரி தாசில்தார் கருணாகரன், துவரங்குறிச்சி, மணப்பாறை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து திருச்சியிலிருந்து வந்த தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர்.
பின்னர், சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் , சடலமாக கிடந்த இளம் பெண் யார்?, எத்தனை நபர்கள் அப்பெண்ணை கடத்தி வந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு கொன்றனர்? என பல்வேறு கோணத்திலும் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.