
விழுப்புரம்
விழுப்புரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து அதிகாரிகளை கேள்விக் கணைகளால் திணறடித்து பிடிக்க வைத்தனர்.
விழுப்புரம் மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் சுற்றுப்புற கிராமங்களுக்கும், சென்னை, கடலூர், கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் 500-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்துகளை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சிறப்பு பேருந்துகளாக மாற்றி திருவண்ணாமலை, திருவக்கரை போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.
இதனால் சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்கும், கிராமப் புறங்களுக்கும் செல்லும் பயணிகள் பேருந்துகள் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சென்னை, வேலூர், ஆரணி, செஞ்சி போன்ற பகுதிகள் மற்றும் விழுப்புரம் பகுதி கிராம புறங்களுக்கு செல்வதற்காக 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்களுக்காக காத்திருந்தனர்.
நள்ளிரவு 1 மணி ஆகியும் வழக்கமான வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அங்குள்ள போக்குவரத்துக்கழக அதிகாரிகளை சந்தித்து, பேருந்துகள் வராதது குறித்து விளக்கம் கேட்டனர்.
அப்போது அதிகாரிகள், "பௌர்ணமி என்பதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகளை, சிறப்பு பேருந்துகளாக மாற்றி திருவண்ணாமலைக்கும், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலுக்கும் அனுப்பி வைத்துள்ளோம்" என்று கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் 100-க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையம் முன்பு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு, திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், "போதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், போதிய பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டு" என்று முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த போக்குவரத்துக்கழக அதிகாரிகள், ஊழியர்கள் பேருந்து நிலையத்தில் இருந்து ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பயணிகளை சமாதானப்படுத்தினர். இதையடுத்து பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.