விடுதலை புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியதன்மூலம் உலகமெங்கும் உள்ள தமிழக மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது எனவும் விடுதலை புலிகள் மீதான தடையை இந்திய அரசும் நீக்க வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் விடுதலை புலிகளின் பெயரை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் சேர்தத்து. மேலும் அவர்கள் போராட்டத்திற்காக சேர்த்து வைத்திருந்த வங்கி பணங்களையும் முடக்கியது.
இதையடுத்து விடுதலை புலிகள் அமைப்பின் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் பயங்கரவாத அமைப்பு பட்டியலில் விடுதலை புலிகளின் பெயரை நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது.
இதனைதொடர்ந்து 2004 ஆண்டு சுனாமி வந்தபோது, தமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கு விடுதலை புலிகள் உதவியது என பலதரப்பட்ட ஆதாரங்கள் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றங்கள் முன்பு சமர்பிக்கப்பட்டன.
மேலும் மக்கள் விடுதலைக்காக போராடும் அமைப்புதான் விடுதலை புலிகள் அமைப்பு எனவும் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இலங்கையின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 2009 க்கு பிறகு எந்த தீவிரவாத செயல்களிலும் விடுதலை புலிகள் அமைப்பு ஈடுபடவில்லை எனவும், எனவே அவர்களின் முடக்கப்பட்ட வங்கிகளின் பணம் விரைவில் விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியதன்மூலம் உலகமெங்கும் உள்ள தமிழக மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது எனவும் விடுதலை புலிகள் மீதான தடையை இந்திய அரசும் நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.