வெளிநாட்டு மருத்துவர்களை இந்தியாவுக்கு வரவழைப்பதே இந்த புதிய சட்டத்தின் நோக்கம் எனவும் மருத்துவ தொழில் வியாபாரமானதற்கு மத்திய அரசே காரணம் எனவும் மருத்துவர் ரவீந்தரநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ கவுன்சிலை அமைப்பதற்கான மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு கடந்த 13 ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் வழக்கியது. இந்த புதிய ஆணையத்தின்மூலம் 4 தன்னாட்சி வாரியங்களை அமைத்து இளங்கலை, முதுநிலை பாடத்திட்டம், கல்வி நிறுவன மதிப்பீடு, மருத்துவர்கள் பதிவீடு போன்றவற்றை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதாவை நாடாளுமன்ற பரிசீலனை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவரும் தேசிய மருத்துவக் கமிஷன் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அப்போது இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் ரவீந்திரநாத், வெளிநாட்டு மருத்துவர்களை இந்தியாவுக்கு வரவழைப்பதே இந்த புதிய சட்டத்தின் நோக்கம் எனவும் மருத்துவ தொழில் வியாபாரமானதற்கு மத்திய அரசே காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.
தனியார் மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணம் அதிகரிக்க புதிய சட்டம் வழிவகுக்கும் எனவும் நீட் தேர்வை தேசிய மருத்துவ ஆணையமே நடத்த புதிய சட்டம் வழிவகுக்கிறது எனவும் தெரிவித்தார்.
வெளிநாட்டு மருத்துவர்கள் நேரடியாக தொழில் செய்ய புதிய சட்டம் அனுமதிக்கிறது எனவும் சென்னை அருகே அன்னை மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் கூட இல்லை எனவும் குறிப்பிட்டார்.