
கச்சத்தீவை மீட்டு மீண்டும் இந்தியாவிற்கு கிடைப்பது மற்றும் பாக் நீரிணை பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டு எடுப்பது தமிழக அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பான கொள்கை விளக்க குறிப்பேட்டில், "தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது சர்வதேச கடல் எல்லையை கடப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர்.
இலங்கை அரசால் நமது மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகள் நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைக்கப்படுவது தமிழக மீனவர்கள் மத்தியில் கவலையையும் பாதுகாப்பின்மையையும் ஏற்பத்தியுள்ளது. எனவே, கச்சத்தீவை மீட்டு மீண்டும் இந்தியாவிற்கு கிடைப்பது மற்றும் பாக் நீரிணை பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டு எடுப்பது தமிழக அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட 88 படகுகள் மற்றும் 23 மீனவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத நிலையில் உள்ள படகுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சட்டபேரவையில் பேசிய முதலமைச்சர், அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாள் என கொண்டாடப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவித்தார். மேலும் சமத்துவ நாள் உறுதிமொழி தமிழகம் முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ அம்பேத்கரின் வெண்கல சிலை நிறுவப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.