
குழந்தையை கடத்தியவர் போலி வழக்கறிஞர் என்பதும் அவர் மேலும் ஒரு ஆண் குழந்தையை கடத்தியதும் விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை இணை ஆணையர் சுதாகர் விளக்கம் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் மணிமேகலை. இவர் சில நாட்களுக்கு முன்பு கர்பிணியாக இருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தங்கி குழந்தை பெற்று கொண்டார்.
பின்னர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த மணிமேகலை, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த சுமித்ரா என்பவருடன் நன்றாக பழகியுள்ளார்.பின்னர், இருவரின் நட்பு தொடரவே, குழந்தையின் தாய் மணிமேகலைக்கு வேலை வேண்டும் என அந்த காவலாளி சுமித்ராவிடம் கேட்டுள்ளார்.
பின்னர் காவலாளி சுமித்ரா, அவருக்கு வேலை வாங்கி தருவதாக வழக்கறிஞர் மணிமேகலையை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முழு உடல் பரிசோதனை செய்வதற்காக தாய் மணிமேகலை வேறு வார்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது வழக்கறிஞர் மணிமேகலை அந்த குழந்தையை கடத்தி சென்றதாக தெரிகிறது.இதனை அடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பூக்கடை காவல் ஆய்வாளர் ஜார்ஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடப்பட்டு வந்தது.
இந்நிலையில் வழக்கறிஞர் மணிமேகலையின் செல்போன் டவரை பின்தொடர்ந்த போலீசார் நேற்று பிற்பகல் கடத்தப்பட்ட குழந்தையை சேலத்தில் மீட்டனர்.
இதைதொடர்ந்து இன்று செய்தியாளரகளை சந்தித்த காவல்துறை இணை ஆணையர் சுதாகர் விளக்கம் அளித்தார்.
அப்போது, குழந்தையை கடத்தியவர் போலி வழக்கறிஞர் என்பதும் அவர் மேலும் ஒரு ஆண் குழந்தையை கடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கடத்தப்பட்ட ஒன்றரை வயது ஆண்குழந்தை அந்த ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், குழந்தையை பறிகொடுத்தவரிடம் இருந்து எந்த தகவலும் கொடுக்கப்பட வில்லை எனவும் குறிப்பிட்டார்.