ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊரக வளர்ச்சி துறையினர் போராட்டம்...

First Published Mar 14, 2018, 9:00 AM IST
Highlights
The panchayats are struggling with the help director office and rural development ...


திண்டுக்கல்

பணியிட மாற்றம் செய்ததைக் கண்டித்து திண்டுக்கல் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை ஊரக வளர்ச்சி துறையினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர்கள் பத்து பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் அந்தந்த அலுவலகங்களில் பொறுப்பேற்று கொண்டனர். 

இந்த நிலையில் அவர்களை பணியிட மாற்றம் செய்ததைக் கண்டித்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை ஊரக வளர்ச்சி துறையினர் திடீரென முற்றுகையிட்டனர். மேலும், பணியை புறக் கணித்து, அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து பெரும்பாலான அலுவலர்கள் பங்கேற்றனர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜ்குமார், "பழனியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஊராட்சி செயலர்கள் பத்து பேரை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாற்றம் செய்தார். அந்த அலுவலர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங் களில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அதன்பின்னர் சில நாள்கள் கழித்து, முறைகேடுகளில் ஈடுபட்டதால் அந்த ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அறிக்கை வெளியிட்டார். இதனால், சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர். இதனால் அவர்களால் அந்த அலுவலகங்களில் பணி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, இடமாற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மாற்று அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், அவர்களை அதே அலுவலகத்தில் பணியாற்ற உத்தரவிட வேண்டும். 

சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்"என்று தெரிவித்தார். 

ஊரக வளர்ச்சி அலுவலர்கள், காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக வளாகம் பரபரப்பானது.

click me!