
சல்லிக்கட்டுக்குப் போராடிய இளைஞர்கள், மாணவர்கள் அடுத்து மணல் கொள்ளை தடுக்க போராட போகிறார்களாம். அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளிக்கும். மக்களும் ஆதரவு தர வேண்டும் என்று நல்லக்கண்ணு தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு திருச்சி மாநகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட திருவளர்ச்சோலையில் காவிரி ஆற்றில் உள்ள மணல் குவாரிக்கு நேற்றுச் சென்று பார்வையிட்டார்.
அதன்[பிறகு, நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியது;
தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளாக நிலவும் கடுமையான வறட்சியால்ம், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட அளவில் பாதியளவு தான் தற்போது மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
கர்நாடக அரசு, கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்திற்குரிய தண்ணீரை முறையாக தரவில்லை. இதனால், ஆறுகளில் மணல் கொள்ளை அதிகளவில் நடக்கிறது.
வெளி மாநிலங்களுக்கு இங்கிருந்து மணல் கடத்தப்படுவதால், தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மணல் கொள்ளை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டும் அதிகாரிகள் இதை கண்டு கொள்வதில்லை. ஆகவே, வெளி மாநிலங்களுக்கு மணல் அனுப்புவதை தடுக்க வேண்டும்.
நகரப் பகுதிகளில் மணல் எடுக்கக் கூடாது என்பது விதி. ஆனால், திருச்சி நகர பகுதிகளிலேயே 20 அடி ஆழம் வரை மணல் அள்ளப்படுகிறது. திருச்சிக்கே வெளி மாவட்டங்களில் இருந்துதான் தண்ணீர் வாங்கும் நிலை ஏற்படும்.
காவிரி ஆறு மூலம் 12 மாவட்டங்களில் விவசாயம் நடக்கிறது. 24 மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
விதிகளை மீறி மணல் எடுப்பதால் இவையும் பாதிக்கப்படுகிறது. மணல் அள்ளுவதை அரசு முறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே வறட்சியால் 10 இலட்சம் தென்னை மரங்கள் தமிழகத்தில் கருகிவிட்டன. இனியும் சகித்துக் கொள்ள முடியாது. இதற்காக குரல் கொடுப்போம்.
சல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள், மாணவர்கள் அடுத்த கட்டமாக மணல் கொள்ளையை தடுக்க போராடப் போவதாக கூறியுள்ளனர். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு தருவோம். மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.