
அந்தமான் கடற்பகுதியில் 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகஉள்ளதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிவருகிறது. அந்தமான் கடற்பகுதியில் 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை 93 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனையடுத்து 24 மணிநேரத்தில் சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வினால் தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், பல இடங்களில் பலத்த கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நவம்பர் 7ம் தேதி அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறு முதல் தலைநகரில் விட்டு விட்டு பெய்து வருவதால் புறநகர் பகுதிகள் 5 நாட்களாக வெள்ளத்தில் மிதக்கின்றன. இன்னும் மூன்று நாட்களுக்கு விடாமல் வெயிலடித்தால் மட்டுமே தண்ணீர் குறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் நவம்பர் 7 முதல் மழை நீடித்தால் புறநகரில் பல பகுதிகளுக்குள் தண்ணீர் புக வாய்ப்புள்ளது.