Tamilnadu Rains : தொடர்ந்து 3 நாட்கள் ‘வெளுத்து’ வாங்கும் மழை... தமிழ்நாடு தாங்குமா...? மக்களே உஷார்....

By Raghupati RFirst Published Nov 28, 2021, 8:17 AM IST
Highlights

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது.கடந்த ஒரு வாரமாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.தமிழ்நாட்டின் தலைநகர் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. இதற்கு டெல்டா மற்றும் கடலோர என மற்ற மாவட்டங்களும் தப்பவில்லை.இன்று சுமார் 12 மாவட்டங்களுக்கு “ரெட்” அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

நாளை  (திங்கட்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினமான செவ்வாய்க்கிழமை அன்று  தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். டிசம்பர் 1 (புதன்கிழமை) அன்று  நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்’ என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

குமரி கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடல், தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், அந்தமான் கடல்பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மேற்சொன்ன நாட்களில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.ஏற்கனவே தமிழகம் முழுவதும் மழையினால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், அடுத்து தொடர்ந்து 3 நாட்களுக்கு வரும் மழையினால் என்னென்ன சேதங்கள் ஏற்படும் என்றும், தமிழ்நாடு எப்படி தாங்கும் என்றும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

click me!