
காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்பவர்களை விசாரணை என்ற பெயரில் இனி யாரையும் துன்புறுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அதிகமாக துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். அப்போது, குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரிகளுக்கு தடங்கலில்லா அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை கிரிமினல் சட்ட விதிகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
விசாரணை என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது எனவும் இனி வரும் காலங்களில் விசாரணைக்கு அழைக்கப்படுபவர்களுக்கு எழுத்துபூர்வமாக ஆஜராக வேண்டிய தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு சம்மன் அனுப்பி அழைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும், காவல் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விசாரணையின் காலஅளவை இனி காவல் நிலைய டைரியில் குறிப்பிட வேண்டும் எனவும் நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.