
மதுரை பல்கலைக்கழக வளாகத்தில் பெண் பேராசிரியர் ஒருவரை மாணவர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை தலைவவராக பேராசிரியர் ஜெனிஃபர் பணியாற்றி வருகிறார்.
ஜெனிஃபர் இன்று காலை வழக்கமாக பல்கலைக்கழகத்துக்கு சென்றார். கல்லூரி வளாகத்துக்குள் சுமார் 10 மணியளவில் அவர் நுழைந்தபோது, அங்கிருந்த மாணவர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு, ஜெனிபரின் கழுத்தில் 3 முறை கத்தியால் குத்தியுள்ளார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்த மாணவர்கள், பேராசிரியரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெனிபருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஜெனிபரை கத்தியால் குத்திய அந்த நபரை, அருகில் இருந்த மாணவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
வேலை வாய்ப்பு முகாம் இரண்டு நாட்கள் முன்பு நடந்ததாகவும், தனக்கு பணி கிடைக்காத விரக்தியில் ஜோதி முருகன், ஜெனிபரை கத்தியால் குத்தியதாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.