பணி காரணமாக டெல்லி சென்ற சென்னை தம்பதியினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா குமார். இவர் நந்தம்பாக்கத்தில் உள்ள எல்&டி கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் அதே நிறுவனத்தில் கிரிக்கெட் வீரராகவும் உள்ளார்.
இவரது மனைவி விஜயலட்சுமி. இவரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஆதித்யா குமாரும், விஜயலட்சுமியும் கடந்த மே மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் பணி காரணமாக கடந்த 3 ஆம் தேதி ஆதித்யா குமார் மனைவியுடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கிருந்து மனைவியை அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் ஹரித்துவார் சென்றார்.
இவர்களுடன் நண்பர் ஷியாம் தேஜா என்பவரும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மர்ம நபர்கள் ஆதித்யா குமாரின் தலையில் சுட்டனர்.
அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதனை துளைத்து உள்ளே சென்று தாக்கியதில், நிலை தடுமாறி மனைவியுடன் கீழே விழுந்தார்.
இதில், மனைவி விஜயலட்சுமிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைபார்த்த நண்பர் ஷியாம் தேஜா விரைந்து வந்து அவர்களை மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அவருகளுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.