
தமிழகத்தில் பல்வேறு இயற்கை சார்ந்த இடங்கள் குவிந்து கிடக்கிறது. இந்த பகுதிகளில் அரிய வகை விலங்குகளும், மரங்களும், மனதை வருடும் இடங்களும் உள்ளது. இந்தப் பகுதிகளில் இயற்கை ஆர்வலர்கள் மலையேற்றம் செய்வார்கள். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குரங்கனி பகுதியில் மலையேற்றம் செய்தனர்.
அப்போது ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மலையற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இயற்கை ஆர்வலர்களால் மலையேற்றம் செய்ய முடியாத நிலை உருவானது. இந்த நிலையில் தமிழக வனத்துறை கடந்த மாதம் மலையேற்றம் தொடர்பான சூப்பரான அறிவிப்பை வெளியிட்டது. தமிழக வனத் துறை 'ஆன்லைன் ட்ரெக்கிங் டிரெயில் அட்லஸ்' மூலம் 40 மலையேற்ற வழித்தடங்களுக்கான இணையதளத்தை (www.trektamilnadu.com) உருவாக்கியது. இந்த மலை ஏற்றத்திற்கான முன்பதிவு கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கியது. மலையேற்றப் பாதைகள்
எளிதான, மிதமான மற்றும் கடினமானவை என 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 40 இடங்கள் மலையேற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது
அதன் படி நீலகிரி பகுதியில் 10, கோவையில் 7 மற்றும் திருப்பூரில் ஒரு மலை யேற்ற வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நபர் ஒருவருக்கு ரூ.599-ல் தொடங்கி அதிகபட்சமாக ரூ.5,099 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
எளிதான பிரிவில் 599 ரூபாய் முதல் 1,449 ரூபாய் வரையும், மிதமான பிரிவில் ரூ.1,199 முதல் 3,549 ரூபாயும், கடினமான பிரிவில் ரூ.2,799 முதல் 5,099 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டணத்திற்கு இயற்கை ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர் கட்டணம் மற்ற மாநிலங்களை விட ரொம்ப ரொம்ப அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மலையேற்றத்துக்கான கட்டணத்தை 25 சதவீதம் குறைத்து வனத் துறை அறிவித்துள்ளது. எளிதான பிரிவுக்கு ரூ.539 முதல் ரூ.1,299, மிதமான பிரிவில் ரூ.1,019 முதல் ரூ.3,019, கடினமான பிரிவில் ரூ.2,099 முதல் ரூ.3,819 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.