
ஈரோடு
லாரி மோதி மொபட்டில் வந்த தொழிலாளி மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதாலும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சென்னியவலசு பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (54). இவர் முடி திருத்தும் தொழிலாளி. இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று பகல் 1.30 மணியளவில் கோபால் பெருந்துறை ஆர்.எஸ்.சாலையில் இருந்து சென்னியவலசுக்கு மொபட்டில் சென்றுகொண்டிருந்தார்.
பெருந்துறை காவல் நிலைய ரௌண்டானா அருகே கோபால் சென்றபோது, பின்னால் வந்த ஒரு லாரி கண் இமைக்கும் நேரத்தில் மொபட்டின்மீது மோதியது. இதில், மொபட்டில் இருந்து கீழே விழுந்தவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதால் கோபால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெருந்துறை காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கோபாலின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோபாலை ஏற்றி கொன்றுவிட்டது தெரிந்ததும் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். இதுகுறித்து பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனம் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகிறார்.