
நாமக்கல்
விதிகளை பின்பற்றி இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவகங்கள், அடுமணை, திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தயார் செய்யப்படும் இனிப்பு, கார வகைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
செயற்கை வண்ணங்கள் கொண்டு இனிப்புப் பொருள்களை தயார் செய்யக் கூடாது.
பால் கொண்டு செய்யப்பட்ட இனிப்பு பொருள்களை மற்ற இனிப்பு பொருள்களுடன் கலந்து பைகளில் அடைத்து விற்பனை செய்யக் கூடாது.
தண்ணீரை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இனிப்புகளை பைகள் மற்றும் அட்டை பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்யும்போது அந்தப் பொருட்கள் தயார் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை அச்சிட வேண்டும்.
இனிப்பு, கார வகைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.
உரிமம் பெறாத இனிப்பு மற்றும் கார வகைகளை தயார் செய்து விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு 55-ன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விதிகளை பின்பற்றி இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிகப்பட்டு வருகிறது” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.