பெரம்பலூர்
பெரம்பலூரில் ரூ.1 கோடியே 1 இலட்சம் மதிப்பில் பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதியை முதலமைச்சர் இடைப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் எதிரேவுள்ள கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தின் அருகில் ரூ.1 கோடியே 1 இலட்சம் மதிப்பில் பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதி ஒன்று புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த விடுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்றுத் திறந்து வைத்தார்.
தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய இந்த விடுதியில் பணிபுரியும் மகளிர் தங்கும் அறைகள், விடுதி காப்பாளர் அறை மற்றும் அலுவலகம் என்று 25 அறைகளும், சமையலறையுடன் இணைந்த உணவுக்கூடமும் என அனைத்து அடிப்படை வசதிகளுடனும் இருக்கிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்த விடுதி பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் நான்கு சாலைப் பகுதியில் முத்துலட்சுமிநகரில் தற்காலிகமாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது.
தற்போது, விடுதிக்கு சொந்தக் கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளதன் மூலம் பணிபுரியும் மகளிர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த காணொலி காட்சி நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார், தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ, மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) முத்துமீனாள், பொதுப்பணித்துறை பொறியாளர் காந்தரூபன் உள்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.