Tamilnadu Rains : தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு இன்று "ரெட்" அலெர்ட்... மக்களே உஷார்…

By Raghupati RFirst Published Nov 28, 2021, 6:42 AM IST
Highlights

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு "ரெட்" அலெர்ட்டை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட சில மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது.ஏரிகள்,குளங்கள்,ஆறுகள் என பல்வேறு நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் நீரினால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வெளுத்து வாங்கி வரும் மழையால் பொதுவாக தமிழகம் முழுவதுமே, இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகி இருக்கிறது. அந்தவகையில் விழுப்புரம், திருப்பத்தூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, கோவை ஆகிய இடங்களில் இயல்பை விட 100 சதவீதத்துக்கு அதிகமாக மழை பெய்து இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 தினங்களை பொறுத்தவரையில் கடலோர மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று,  சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 12 வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.எனவே கடலோர மாவட்ட மக்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுத்திருப்பதால், மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுவது அவசியம் ஆகும்.

click me!