தூத்துக்குடி
தூத்துக்குடியில் ஆன்லைனில் தனது காருக்கு ஸ்பீக்கர் ஒன்றை ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் உடைந்த செங்கல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் செல்வக்குமார். இவர், தனது காருக்கான ஸ்பீக்கர் ஒன்றை ஆன்லைன் வர்த்தகம் மூலம் வாங்க முடிவு எடுத்து கடந்த 1–ஆம் தேதி ஸ்பீக்கர் ஒன்றை பதிவு செய்தார்.
நேற்று மதியம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து வந்த பார்சலை தனியார் கூரியர் நிறுவன ஊழியர் அவரிடம் கொடுத்தார். இதனால் செல்வக்குமார், ஸ்பீக்கருக்கான தொகை ரூ.5000 செலுத்தி பார்சலை பெற்றுக் கொண்டார்.
பின்னர் அவர், அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது பார்சலில் உடைந்த செங்கல் இருந்தது. இதனைப் பார்த்த அவர்அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் முறையான பதிலளிக்கவில்லை.
இதுகுறித்து உடனே அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவன அதிகாரியை அழைத்து விசாரித்தனர்.
அதனைத் தொடர்ந்து கூரியர் நிறுவனத்தை சேர்ந்தவர், பணத்தை அவரிடம் திருப்பிக் கொடுத்தார். இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்திடம் இருந்து தாங்கள் பெற்றுக் கொள்வதாகவும் கூரியர் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
கார் ஸ்பீக்கருக்கு பதிலாக உடைந்த செங்கல் வந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.