தேனி
தேனியில் புறா பிடிக்க முயன்று 150 அடி ஆழ வற்றிய கிணற்றில் விழுந்த சிறுவனை தீயணைப்பு படையினர் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர்.
தேனி மாவட்டம், போடியை அடுத்த பி.தர்மத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா மகன் சிவா (16). இவர் நேற்று மாலை 6 மணிக்கு அதே பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி அருகே தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த கிணற்றின் அருகே உள்ள மரத்தில் அமர்ந்து இருந்த புறாவை சிவா பிடிக்க முயன்றுள்ளார்.
இதில் எதிர்பாராதவிதமாக சிவா சுமார் 150 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். உடனே அவனுடைய நண்பர்கள் ஊருக்குள் சென்று சிவா கிணற்றில் தவறி விழுந்ததை பெற்றோரிடம் தெரிவித்தனர்.
பின்னர், இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து சிவாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு வந்துவிட்டதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்ட நிலையில் கிணற்றுக்குள் விழுந்த சிவாவும் மயங்கிவிட்டார். இதனால் அவர் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை.
சுமார் மூன்று மணி நேரம் போராடி கயிறு ஏணியின் மூலம் தீயணைப்புப் படையிணர் கிணற்றுக்குள் இறங்கி சிவாவை உயிருடன் மீட்டனர்.
பின்பு காயமடைந்த சிவாவை சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புறா பிடிக்க முயன்றபோது சிறுவன் வற்றிய கிணற்றில் விழுந்து சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது.