நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் பல்வேரு பகுதிகளில் பைக் திருடிய பலே திருடன் சிக்கினான். அவரிடம் இருந்து 21 இருசக்கர வாகனங்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் அழகேசன் தலைமையிலான காவலாளர்கள், சோழம்பேட்டை அண்ணாசிலை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தார்.
அவரிடம் தொடர்ந்த விசாரணையில், அந்த நபர் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம் கத்தரிமேட்டைச் சேர்ந்த ரா. செல்வம் (42) என்பதும், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரியவந்தது.
இதனையடுத்து, அவரிடமிருந்து 21 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் செல்வம் மீது வழக்குப்பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.