கொல்லிமலையில் மூன்று இடங்களில் ஆவின் பாலகம் அமைக்க ஆட்சியரிடம் கோரிக்கை மனு...

First Published Feb 23, 2018, 1:07 PM IST
Highlights
Request a petition to set up Aavin camp in three places in Kolimala


நாமக்கல்

கொல்லிமலையில் மூன்று இடங்களில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இந்து மலையாளி விவசாய முன்னேற்ற சங்க கூட்டமைப்பினர் நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செம்மேடு மற்றும் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி ஆகிய இடங்களில் இந்த கூட்டமைப்பின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இந்து மலையாளி தொழிலாளர் நல பிரிவு தொடக்க விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது. 

இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய தென் மண்டல ஆதிவாசி கூட்டமைப்பு தலைவர் சின்னப்பன் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்தார். 

மாநில கூட்டமைப்பு தலைவர் வெள்ளையன், மாநில பொருளாளர் அன்புராஜன், மாநில துணை செயலாளர் பால்முருகன், தொழிலாளர் நலப்பிரிவு நிர்வாகிகள் ராஜ்குமார், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் பல மாவட்டங்களில் இருந்து இந்து மலையாளி கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.  

பின்னர், தமிழ்நாடு இந்து மலையாளி விவசாய முன்னேற்ற சங்க கூட்டமைப்பினர் நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியத்திடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அந்த மனுவில், "தமிழ்நாடு இந்து மலையாளி விவசாய முன்னேற்ற சங்க கூட்டமைப்பு உதவியுடன் மலைவாழ் மக்களால் தொடங்கப்பட்ட குறிஞ்சிநாடு மக்கள் நல அறக்கட்டளை மூலமாக நபார்டு வங்கி அனுமதியுடன் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் புலவர் மன்றங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

அந்த குழுக்கள் மூலம் சோளக்காடு பேருந்து நிலையம், செம்மேடு பேருந்து நிலையம், அரப்பளஸ்வரர் கோவில் வளாகம் ஆகிய மூன்று இடங்களில் ஆவின் பாலகம் நடத்துவதற்கு கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பித்து இருந்தோம். 

அதைக் கேட்ட அவர் ஊரக வளர்ச்சி துணை இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தை பல முறை தொடர்பு கொண்டு கேட்டும் அனுமதி பெற முடியாமல், மறுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் அளித்துள்ள உரிம நாட்கள் மிக குறைவான நாட்களாக உள்ளது. 

எனவே விரைவாக மூன்று பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் உழவர் மன்றத்தினர் பயன்பெறும் வகையில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று அதில் கூறி இருந்தனர்.

click me!