
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி, தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகளும் அவற்றுடன் இணைந்த 169 பார்களும் நாளை முதல் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சராக கடந்த 16 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். 18 ஆம் தேதி சட்டசபையில் தமது பெரும்பான்மையை நிரூபித்தார்.
இதைதொடர்ந்து ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பும் ஒன்று.
மதுக்கடைகளை மூடும் உத்தரவில் பதவி ஏற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போது தமிழகம் முழுவதும் மூடப்படவிருக்கும் 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியலையும் மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகளும் அவற்றுடன் இணைந்த 169 பார்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில், 105 மதுபான கடைகளும் 63 மதுபான கூடங்களும் மூடப்படுகின்றன.
கோவை மண்டலத்தில், 44 மதுபான கடைகளும் 20 மதுபான கூடங்களும் மூடப்படுகின்றன.
மதுரை மண்டலத்தில், 99 மதுபான கடைகளும் 37 மதுபான கூடங்களும் மூடப்படுகின்றன.
சேலம் மண்டலத்தில், 133 மதுபான கடைகளும் 26 மதுபான கூடங்களும் மூடப்படுகின்றன.
திருச்சி மண்டலத்தில், 119 மதுபான கடைகளும் 23 மதுபான கூடங்களும் மூடப்படுகின்றன.
மேலும், மூடப்படும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு, டாஸ்மாக் நிறுவனத்திலேயே வேறு பணி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு மே மாதத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா, 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.