விவசாயி செத்துக் கொண்டு இருக்கிறான் என்றால் நாடு சுடுகாடாகிறது என்று அர்த்தம்

First Published Jan 7, 2017, 9:25 AM IST
Highlights


கரூர்,

விவசாயி செத்துக் கொண்டு இருக்கிறான் என்றால் நாடு சுடுகாடாகிறது என்று அர்த்தம் என்று கரூரில் சீமான் தெரிவித்தார்.

சல்லிக்கட்டு, சேவல் சண்டை நடத்த அனுமதிக்க வேண்டும். மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும் என்று கூறி நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்டம் சார்பில் நேற்று மாலை கரூரில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நன்மாறன் வரவேற்றுப் பேசினார்.

அப்போது செய்தியாளர்களுக்கு சீமான் அளித்த பேட்டி:

“மணல் அள்ளுவதால் 33 ஆறுகள் செத்துப்போய் விட்டன. ஆற்றின் கரையோரம் இருந்த பனை, தென்னை மரங்கள் காய்ந்து போய் விட்டன. விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.

விவசாயி செழிப்பாக இருக்கிறான் என்றால் அந்த நாடு செழிப்பாக இருக்கிறது என்று அர்த்தம். விவசாயி செத்துக் கொண்டு இருக்கிறான் என்றால் நாடு சுடுகாடாகிறது என்று அர்த்தம்.

சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்டப் பணம் மணல் அள்ளிய பணம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மணல் கொள்ளையர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வோம் என்று கூறினார். ஆனால், அவர்கள் ஆட்சியிலும் மணல் அள்ளிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும். சிறந்த நீர் வடிகட்டி மணல். நீரும், சோறும் இல்லை என்றால் நாட்டில் புரட்சி ஏற்படும்.

சல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாறி, மாறி பேசி வருகிறார்கள். எனவே, தடையை மீறி சல்லிக்கட்டு நடத்துவோம். அதே போன்று சேவல் சண்டையும் நடத்துவோம்” என்று அவர் தெரிவித்தார்.

tags
click me!